திரைப்படங்கள் மூலம் மக்கள் நினைவில் என்றும் வாழ்வார் ஸ்ரீதேவி: சந்திரபாபு நாயுடு, விஜயாகாந்த்
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமராவதி : நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளர்.
தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.
தமிழ், இந்தி மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் மிகச்சிறந்த படங்களில் நடித்தவர்.அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு.
துபாயில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவருக்கு போனி கபூர் என்கிற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பல்வேறு மொழிகளில் நடித்து பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் ஈடு இணையற்ற நடிப்புத் திறன் கொண்டவர். அவரின் திரைப்படங்களே அதற்கு சாட்சி. ஸ்ரீதேவியின் மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . அவரின் திரைப்படங்கள் மூலம் எப்போதும் நினைவு கொள்ளப்படுவார் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மரணச்செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.