குருவாயூர் கோயிலில் மனைவியோடு இலங்கை பிரதமர் ரணில் சாமி தரிசனம்
குருவாயூர்: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
கேரளாவில் உள்ள குருவாயூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் துலாபாரம் வேண்டுதல் புகழ்பெற்றது.
இந்த கோயில் மீது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு தனி ஈர்ப்பு உள்ளது. இதனால், அவ்வப்போது, சாமி தரிசனம் செய்ய இக்கோயிலுக்கு அவர் வருவதுண்டு.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குருவாயூர் வந்த ரணில் விக்ரமசிங்கே, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தினார். எடைக்கு ஈடாக சந்தன கட்டைகள் வைத்து நேர்த்திக்கடனை வழங்கினார்.
இந்நிலையில், குருவாயூர் கிருஷ்ணர் கோயில் சிறப்பு வழிபாடு செய்ய, ரணில் விக்ரமசிங்கே மற்றும் அவரின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கே இருவரும் தனி விமானம் மூலம் கேரளா வந்துள்ளனர்.
இன்று காலை குருவாயூரில் சிறப்பு வழிபாடுகள் செய்த அந்த தம்பதி, மாமியூர் மஹாதேவா கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்யவிருக்கிறார்கள். வழிபாடுகளை முடித்து விட்டு மீண்டும் மாலை 4.15 மணிக்கு கொச்சி விமானநிலையத்தில் இருந்து கொழும்பு புறப்படுகின்றனர்.