ராஜபக்சே வெற்றி பெறக்கூடாது.. வேண்டுதலோடு இலங்கை தேர்தலை கவனிக்கும் இந்தியா!
டெல்லி: இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை இந்தியா மிகவும் உன்னிப்போடு கவனித்து வருகிறது.
8 மாதங்கள் முன்பு, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து சிறிசேனா அதிபரானார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே, தோல்விக்கு பழிதீர்த்து பிரதமராகும் கனவிலுள்ளார்.
சிறிசேனா மற்றும் ராஜபக்சே ஒரே கட்சியை சேர்ந்த பகைவர்கள். எனவே, ராஜபக்சேவுக்கு தேர்தலில் சீட் கிடைத்துவிட கூடாது என்பதற்கு சிறிசேனா எவ்வளவோ முயற்சி எடுத்து பார்த்தார் முடியவில்லை. எனவே தனது கட்சி தோற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டுள்ளார்.
அதேநேரம், ராஜபக்சே சீனாவுக்கு ஆதரவானவர் என்பதால், இந்தியா இந்த தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில்விக்ரமசிங்கே கூட்டணிதான் இந்தியாவுக்கு வசதியாக உள்ளது. ராஜபக்சே பிரதமரானால் சீனாவுடன் நேசக்கரம் நீட்டுவார், இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல்களை நிறுத்த ஏற்பாடு செய்வார் என்றெல்லாம் இந்தியா கவலையடைந்துள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க, இலங்கைக்கு சில விஷயங்களில் நெருக்கடி தரமுடியாத சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடும். அவ்வாறு ஏற்பட்டால், தமிழர், மற்றும் மீனவர் பிரச்சினைகளில் மோடி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அவப்பெயர் வந்துவிடும். எனவே தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.