ராஜிவ் கொலை வழக்கு: 'இந்தியா கேட்டுக் கொண்டால் கே.பி.யை இலங்கை அரசு நாடு கடத்தும்'
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி.யை இந்தியா கேட்டுக் கொண்டால் விசாரணைக்காக இலங்கை அரசு நாடு கடத்தும் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி ஏற்பாட்டாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி. தொடர்பான அனைத்து ஆதாரங்களும் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போதைய நிலையில் இலங்கையில் கே.பி. மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது இயலாத ஒன்றாகி விட்டது.
அதே நேரத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் உயிருடன் இருக்கும் ஒரே சந்தேக நபர் குமரன் பத்மநாதன் என்ற கே.பி.தான். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
ஆகையால் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் கே.பி.யை ஒப்படைக்க இந்தியா கோரினால் இலங்கை அரசு அதை செய்யும்.
இவ்வாறு ஜான் அமரதுங்க கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் பின்னர் மலேசியாவில் இருந்த கே.பி. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டார். அப்போதும் இந்திய அதிகாரிகள் கொழும்பு சென்று கே.பி.யிடம் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியிருந்தனர்.
தற்போது கிளிநொச்சியில் போரில் மரணித்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள், பொதுமக்களின் குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களை கே.பி. நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.