தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட... 42 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை ஒப்புதல்
தமிழக மீனவர்கள் 42 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 42 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை அரசுடனான தமிழக மீனவர்களின் சுமூக உறவு என்பது காலங்காலமாக இல்லாத ஒன்றாகும். தமிழக எல்லையில் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், சில சமயங்களில் குருவிகளை சுடுவது போல் சுட்டு கொள்வதும் நடப்பது வாடிக்கையான ஒன்றாகும்.
அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்படுவர். அவர்களை விடுவிக்கக் கோரியும், படகுகளை திரும்ப தர கோரியும் மத்திய - மாநில அரசுகள் இலங்கை அரசிடம் மன்றாடுவதும் அடிக்கடி நடப்பதுதான். அந்த வகையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 42 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்க கோரி இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி மீனவர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் நல்லெண்ண அடிப்படையில் 42 பேர் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.
அவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிகிறது. அவர்களின் படகுகளும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது.