கொரோனாவுடன் வந்த 10 வயது சிறுவன்.. வீட்டில் கை கழுவுமாறு அட்வைஸ்.. 4 மருத்துவமனைகளில் அலைக்கழிப்பு
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் படுக்கை வசதி இல்லை என கூறி கொரோனா அறிகுறியுடன் உள்ள சிறுவனை சோதனை கூட செய்யாமல் 4 மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி, கைகளை சுத்தமாக கழுவிக் கொண்டு வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை தடுக்க மருத்துவமனைகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன.
கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தாலோ வெளிநாடுகளில் இருந்து திரும்பினாலோ உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை அணுகலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தப்லீகீ ஜமாத்
இந்த நிலையில் டெல்லியில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் நடத்திய வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது. கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டோர் என தெரியவந்துள்ளது.
கொரோனா
இதையடுத்து அவர்களை அந்தந்த மாநிலத்தவர்கள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்தது. அந்த சிறுவன் மாநாட்டை நடத்திய மதகுருவுடன் கைகுலுக்கியது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த மதகுருவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
மருத்துவமனை
இந்த நிலையில் அந்த 10 வயது சிறுவனுக்கு மெல்ல மெல்ல கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அந்த சிறுவனை கடந்த 28ஆம் தேதி மருத்துவமனைக்கு அவரது தந்தை அழைத்து சென்றார். இதையடுத்து அந்த சிறுவனை சோதனை செய்யாமல் அனுமதிக்கவும் செய்யாமல் வேறொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அந்த பரிந்துரை கடிதத்தில் சிறுவனுக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவன் ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.
முதலில் வந்த மருத்துவமனை
அந்த மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என கூறி 48045 என்ற டிக்கெட் நம்பரை கொடுத்து அனுப்பியது. பின்னர் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை கூட அந்த மருத்துவமனை அனுப்ப மறுத்துவிட்டது. இதையடுத்து எப்படியோ சிறுவனை அழைத்து கொண்டு அவரது தந்தை முதலில் வந்த மருத்துவமனைக்கே வந்தார். அங்கு யாரும் இவர்களை கண்டுக் கொள்ளவில்லையாம்.
வேதனை
அங்கும் படுக்கை வசதி இல்லை என கூறி 1268555 என்ற டிக்கெட் எண்ணிக்கை கொடுத்து காத்திருக்குமாறு கூறிவிட்டனர். அந்த சிறுவனுக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிந்தும் சிறுவனை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுமாறும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுமாறும் தெரிவித்துவிட்டனர் என தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.