ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்: வீரர் ஒருவர் பலி; 8 பேர் காயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 8 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஜகுரா பகுதியில் எஸ்.எஸ்.பி. எனப்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு, இந்திய வீரர்கள் தரப்பில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று இரவு 7.30 மணி அளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்த இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பழிவாங்கும் விதமாக தீவிரவாதிகள் இந்திய எல்லையில் உள்ள நமது ராணுவ முகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.