ஆளுநர் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் பரபர தீர்ப்பு.. ஸ்டாலின், ப.சிதம்பரம் வரவேற்பு!
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான டெல்லியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் உள்ளது. இருவருக்கும் இடையே யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பான பிரச்சினை, நீதிமன்றம் வரை சென்றது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
5 நீதிபதிகள் அமர்வு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
குழப்பத்துக்கு இடமில்லை
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை.
ஒப்புதல் அவசியமல்ல
அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம்; ஆனால் ஒப்புதல் அவசியமல்ல என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்கு வரவேற்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு, திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு
மு.க. ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
புரிந்துகொள்ள வேண்டும்
இதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேபோல், ப. சிதம்பரமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தனது டிவிட்டரில், வரவேற்று பதிவிட்டுள்ளார்.