இந்திரா, ராஜிவ் ஸ்டாம்புகள் நிறுத்தம்- உபாத்யாய, சியாமா பிரசாத் முகர்ஜி தபால்தலை வெளியிட முடிவு!
டெல்லி: முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் காந்தி உருவம் பொறித்த தபால் தலைகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் இந்துத்துவா தலைவர்களான தீனதயாள் உபாத்யாய, சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்டோர் தபால்தலைகளை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவல்கள் விவரம்:
2008ஆம் ஆண்டு நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற தலைப்பில் ரூ 5 மதிப்பிலான இந்திரா, ராஜிவ் ஆகியோரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலைகளை மத்திய அஞ்சல்துறை வெளியிட்டிருந்தது. மேலும் வெவ்வேறு ரூபாய் மதிப்பிலான ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்யஜித் ரே, ஹோமி பாபா, ஜே.ஆர்.டி. டாட்டா, அன்னை தெராசா ஆகியோரது தபால் தலைகளும் வெளியிடப்பட்டன.
2009 ஆம் ஆண்டு ஈ.வெ. ராமசாமி, சி.வி. ராமன் மற்றும் ருக்மணிதேவி அருண்டேல் ஆகியோரது உருவம் பொறித்த தபால்தலைகளும் இதே தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டன.
தற்போது ரூ5 மதிப்பிலான தபால் தலைகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. (இந்திரா, ராஜிவ் தபால்தலைகள் ரூ5 மதிப்பிலானவை என்பது குறிப்பிடத்தக்கது).
மேலும் நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற தலைப்புக்கு பதிலாக இந்தியாவின் சிற்பிகள் என்ற புதிய தலைப்பில் 24 தபால் தலைகளை வெளியிட திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
இந்த புதிய தபால் தலைகளில் தீனதயாள் உபாத்யாய, ஜெயபிரகாஷ் நாராயண், சியாமா பிரசாத் முகர்ஜி, ராம் மனோகர் லோகியா ஆகியோருடன் சேர்த்து வல்லபாய் படேல், பாலகங்காதர திலகர், சுபாஷ் சந்திரபோஸ், ராஜேந்திர பிரசாத், மவுலானா அபுல்கலாம் ஆசாத், பகத்சிங், ரவீந்திரநாத் தாகூர், சத்ரபதி சிவாஜி, மகாராணா பிரதாப், விவேகானந்தர், பாரதியார், பண்டிட் ரவிசங்கர், பீம்சென் ஜோஷி, எம்.எஸ். சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான் ஆகியோருக்கும் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளன.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசின் விருதுகளில் இந்திரா, ராஜிவ் பெயரை மத்திய அரசு நீக்கியிருக்கும் நிலையில் இருவரது தபால்தலைகளையும் நிறுத்த முடிவு செய்திருப்பது காங்கிரசாரை கொந்தளிக்க வைத்துள்ளது.