தொழில்முனைவோரை உருவாக்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நொய்டா: நாட்டில் புதிதாக 2.5 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி அருகே நொய்டாவில் நேற்று தொடங்கி வைத்தார்.
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், உள்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து 5,100 இ-ரிக்ஷாக்களின் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாடு முழுவதிலுமாக 2.5 லட்சம் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும். 1.25 லட்சம் வங்கிக் கிளைகள் மூலம் இக்கடனுதவியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோருக்கு எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. எனவேதான் தொழில் நடத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று வேலை தேடுபவர்களாக இருப்பவர்கள், நாளை பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக உருவெடுப்பர்.
இ-ரிக்ஷாக்கள் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொருத்தப்பட்டுள்ள மின்கலன்களை சூரியசக்தி மூலம் "சார்ஜ்' செய்துகொள்ள முடியும்.
இவ்வாறு மோடி கூறினார்.
முன்னதாக அலங்கரிப்பட்ட இ-ரிக்ஷாவில் அமர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அவர் வருகை தந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் கடந்த 3 மாதங்களில் இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஆனால், அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இரு முறையும் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தவிர்த்து விட்டார்.