பணம் கிடைக்காததால் ஆத்திரம்.. ஸ்டேட் பாங்கை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
உத்தரப்பிரதேசத்தில் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பொது மக்கள் எஸ்பிஐ வங்கியை அடித்து நொறுக்கினர்.
மொரதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை உள்ளூர் பொதுமக்கள் அடித்து நொறுக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 8ம் தேதி இரவு தொலைக்காட்சி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியது.
இதனையடுத்து, பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கிக் கணக்கில் நவம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. கடந்த நான்கு நாட்களாக கையில் பணமிருந்தும் செலவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். வங்கிகள் முன் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
நேற்று முதல் ஏடிஎம்கள் செயல்படத்தொடங்கினாலும், போதிய பணம் அவற்றில் இருந்து எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கிக் கிளையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மக்கள் குவிந்தனர்.
ஆனால் வங்கிக் கிளை மாலை நான்கு மணியுடன் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் வங்கியை அடித்து நொறுக்கினர். மேலும் அவர்கள், வங்கியை இரவு எட்டு மணி வரை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
முன்னதாக முசாபர்நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணத்தை மாற்றுவதற்காக குவிந்த மக்கள், பொறுமையிழந்து அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர். அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.