'மகனைப் பிரதமர் ஆக்கவே ஆந்திராவைப் பிரிக்கிறார்கள்...'சோனியாவை மறைமுகமாக தாக்கிய ஜெகன்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம இரண்டாக பிளவு படுவதன் பிண்ணனியில் ராகுலைப் பிரதமராக்கும் சோனியாவின் திட்டமிருப்பதாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஜெகன் மறைமுகமாக காங்கிரஸைத் தாக்கிப் பேசியுள்ளார்.
தனித் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு சம்மதம் தெரிவித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். அதனைத் தொடந்து, நேற்று தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் ஜெகன்.
உண்ணாவிரதப் பந்தலில் பேசிய ஜெகன், ஆந்திரா இரண்டாகப் பிளவுபடுவதின் பிண்ணனியில் மகனைப் பிரதமராக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக காங்கிரஸை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது...
மந்திரிசபை ஒப்புதல்....
‘தனித் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு மந்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது கண்டிக்கத்தக்கது. இதனால் மாநிலத்தில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்.
தெலுங்கானா முடிவு....
ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததால், எம்.பி.க்களின் பதவி பறிப்பு அவசர சட்டத்தை வாபஸ் வாங்கும்போது, தெலுங்கானா உருவாக்கும் முடிவை ஏன் திரும்ப பெற முடியாது?
மௌனம் ஏன்..?
போடோலேண்ட்,கோர்காலேண்ட், விதர்பா உள்ளிட்ட தனி மாநில பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு பேசாதது ஏன்?
பிரதமர் கனவு....
தேசிய தேர்தலை மனதில் கொண்டே மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசம் இருக்க வேண்டும் என விரும்பவில்லை. யாரோ (சோனியா) தன் மகனை பிரதமர் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் மாநிலத்தைப் பிரிக்கிறார்.
எதிர்த்து வழக்கு....
தெலுங்கானா உருவாக்கம் தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்' எனத் தெரிவித்தார்.