பிற மாநில விவசாயிகள் ம.பி.யில் வேளாண் பொருட்களை விற்றால் சிறை.. பாஜக முதல்வர் வார்னிங்
போபால்: மத்திய பிரதேசத்தில் பிற மாநில விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்றால் சிறைக்கு அனுப்புவேன் என அம்மாநிலத்தை ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சிவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சடடத்தை எதிர்த்து பாஜக முதல்வரே இப்படி பேசியருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் காலவரையின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அண்மையில் இந்த போராட்டத்தை கைவிடக்கோரி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவித்தார். விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அழைத்தார். ஆனால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன.
ஹைதராபாத் தேர்தல்.. அசத்திய பாஜக.. ஓவைசியை நம்பியிருக்க வேண்டிய இக்கட்டான நிலையில் கேசிஆர்!
குறைந்த பட்ச விலை
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டப்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்த பகுதியிலும் சென்று விற்க முடியும். ஆனால் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டத்தில் அரசு உறுதியளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
யாருக்கு அனுமதி
இந்நிலையில் பாஜக ஆளும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அங்குள்ள சேஹோரில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார் . அப்போது அவர் விவசாயிகளிடம் பேசுகையில், ‘மத்திய பிரதேச மாநிலத்தில் உற்பத்தியாகும் விவசாய பொருட்களை, இங்கேயே விற்க அனுமதிக்க முடிவு செய்துள்ளேன்.
சிறைக்கு அனுப்புவேன்
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், மத்திய பிரதேசத்திற்கு வந்து தங்கள் பயிர்களை விற்க முயன்றால், அவர்களின் லாரிகளை பறிமுதல் செய்வோம்.
அந்த விவசாயிகளை சிறையில் அடைப்போம்' என்றார்.
மத்திய அரசு
மத்திய அரசும், பிரதமர் மோடியும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்த பகுதியிலும் விற்க அனுமதிக்கப்படும் என்று கூறிவரும் நிலையில் , புதிய வேளாண் சட்டப்படி பிற மாநில விவசாயிகளை தங்கள் விளைபொருட்களை மத்திய பிரதேசத்தில் விற்றால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.