மருத்துவம், பல் மருத்துவ நுழைவு தேர்வுகளை மத்திய அரசு மட்டுமே நடத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: அகில இந்திய அளவிலான மருத்துவ தகுதி நுழைவுத் தேர்வை எதிர்க்கும் வழக்கு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிகாஸ் சிங், இந்த ஆண்டு மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகளே நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று குறிப்பிட்டார்.
ஆனால் சில மருத்துவ கல்லூரிகள் நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மருத்துவ கவுன்சிலிங் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த ஆண்டு மட்டும் மாநில அரசுகள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி வழங்கியிருந்தனர். இந்த வழக்கில், மத்திய அரசு நிலுவை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் இன்று அறிக்கையாக தாக்கல் செய்தார்.
இதனிடையே முதல் கட்ட மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதியவர்களும், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர், மாணவர் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார்
இந்த மனுவும் இன்று நீதிபதி தாவே தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மே 1ம் தேதி நடைபெற்ற NEET-I தேர்வில் பங்கேற்க தயாராகாத மாணவர்கள், ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ள NEET-II தேர்விலும் பங்கேற்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி வழங்கினர். விண்ணப்பங்களை நிரப்பாமல் இருந்திருந்தாலும், இத்தேர்வில் அவர்கள் பங்கேற்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜூலை 24ம் தேதிக்கு பதிலாக NEET-II தேர்வுகளை வேறு ஒரு நாளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதில் சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசுக்கு முழு உரிமையுள்ளது. இதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் உச்சநீதி்மன்றம் கூறியுள்ளது.
மேலும், இட ஒதுக்கீட்டை NEET தேர்வு பாதிக்காது என்றும், சிறுபான்மையினர் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கான மருத்துவ நுழைவு தேர்வுகளை நடத்த உரிமையுள்ளது என்றும், மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. எனவே மருத்துவ நுழைவு தேர்வு விவகாரத்தில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.