பசு சார்ந்த வன்முறைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு.. ஜாதி, மத சாயம் பூச கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கக்கோரி, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தென்சன் பூனாவாலா உள்ளிட்ட சிலர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கன்வில்கர், சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"எவர் ஒருவரும் சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கூடிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. பசு சார்ந்த வன்முறைகளை ஒரு மதத்தினுடைய அல்லது சாதியினுடன் பொருத்திப் பார்க்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர் என்பவர் பாதிக்கப்பட்டவரே, அவ்வளவுதான்" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கின், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கடுமையான ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் இந்த உத்தரவை ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை, மகாத்மா காந்தியின் வம்சாவழியை சேர்ந்த தருண் காந்தி என்பவர் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்ட மூன்று மாநிலங்களும், மத்திய அரசும் தங்கள் பதிலை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசுகள் சம்மந்தப்பட்டது என கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.