பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது... ஆதார் ஆணையம் அறிவிப்பு
பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி: பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் அட்டைகள் மட்டுமே செல்லும் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் கார்டு குறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ரூ. 50 , ரூ. 300 அல்லது அதற்கு மேல் பணத்தை வசூல் செய்து கொள்ளும் சில ஆதார் கார்டு ஏஜென்சிகள் அவற்றை பிளாஸ்டிக் மற்றும் பிவிசி ஷீட்களில் அச்சடித்து கொடுக்கின்றன. இதுபோன்று நமது விவரங்களை அச்சிட்டு ஆதார் கார்டு என்று கூறும் இந்த கார்டு தேவையில்லாத ஒன்றாகும்.
அரசால் வழங்கப்படும் ஆதார் கார்டோ அல்லது பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் கார்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் ஆதார் அட்டை வைத்திருப்போர் ஆதார் கார்டை பிளாஸ்டிக் அட்டையில் அச்சடிக்கவோ லேமினேஷன் செய்யவோ பணம் கொடுத்து ஸ்மார்ட் ஆதார் கார்டு வாங்குவதோ தேவையில்லை. இதுபோன்று ஒரு நடைமுறையை அரசு கடைபிடிக்கவில்லை.
ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் https://eaadhaar.uidai.gov.in என்ற இணையதள முகவரியில் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளாஸ்டிக் கார்டுகளில் தயார் செய்யப்படும் ஆதார் கார்டுகள் மூலம் மக்களின் விவரங்கள் திருடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே கடைகளில் சென்று ஆதார் கார்டு பெற்றுக் கொள்வதை தவிருங்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.