சொந்த வீட்டில் பணம் திருடும் மனைவியை கணவர் விவாகரத்து செய்யலாம்: ஹைகோர்ட்
கடந்த 2008ம் ஆண்டு மும்பை குடும்பநல கோர்ட்டில் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தன் மனைவி தனக்கு தெரியாமல் தன் சொந்த வீட்டில் பணம் திருடுகிறார் என்றும், மேலும் தன்னுடைய நண்பரின் டெபிட் கார்டு மூலம் ரூ.37 ஆயிரத்து 500 மோசடியில் ஈடுபட்டார் என்றும், அதனால் போலீசில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், மனைவியின் இத்தகைய விரும்பத்தகாத நடவடிக்கையால் தனக்கு சமூகத்தில் அவபெயர் ஏற்பட்டுள்ளதாவும் தனது விவாகரத்துக்கான காரணமாக மனுவில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட்டு நீதிபதி, மனுதாரருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.
ஆனால், குடும்பநல கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரரின் மனைவி மும்பை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஆச்சிலியா மற்றும் விஜய தஹில்ரமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனைவி, தன் கணவருக்கு தெரியாமல் தன் சொந்த வீட்டில் பணம் திருடினால் கூட அது திருட்டு தான். மனுதாரர் மூலம் அவரது கணவர் சொல்லணாத் துயரத்துக்கு ஆளாகி இருப்பது தெரியவருகிறது. ஆகையால், கீழ் கோர்ட்டு விதித்த தீர்ப்பை உறுதி செய்து ஹைகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.