8ல் ஒரு இந்தியரின் உயிரைக் குடிக்கும் புகை: தம்மடிப்பவர்களே உஷாரய்யா உஷாரு!
டெல்லி: மும்பையைச் சேர்ந்த அஸ்கர் அலி சித்திக்(45) என்பவருக்கு வேகமாக நடந்தால், மாடிப்படி ஏறினால் மூச்சுவிடுவது கடினம். அதற்கு காரணம் அவர் 15 வயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து புகைப்பிடிக்கத் துவங்கியது தான்.
ஒரு சிகரெட் பிடித்துப் பார்க்கலாம் என நினைத்த சித்திக் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவர் சிகரெட், பீடி என கண்டமேனிக்கு புகைப்பிடித்தார். 35 வயதில் சுவாசப் பிரச்சனை காரணமாக முதன்முதலாக மருத்தவரை சந்தித்தார். அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தான் சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது என்பதை அறிந்த அவர் அந்த பழக்கத்தை நிறுத்தினார்.
அவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் முன்பே அவருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து இரும்புக் கொல்லனாக வேலை செய்ய முடியவில்லை. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.
ஆஸ்துமா
இரண்டாவது மோசமான நாள்பட்ட சுவாசப் பிரச்சனை ஆஸ்துமா ஆகும். வாகனப் புகை உள்ளிட்ட பலவகை காரணங்களால் ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா வந்தால் சுவாசப் பிரச்சனை, நெஞ்சடைப்பு, இருமல், மூச்சு வாங்குதல் ஏற்படும். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நாள்பட்ட சுவாச நோய்களால் 2012ம் ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை 1998ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 119 சதவீதம்(0.58 மில்லியன்) அதிகரித்துள்ளது.
சுவாச நோய்
இந்திய மக்களை கொல்லும் நோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது சுவாச நோய்கள். இம்முறை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. நகரப்புறங்களை விட இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். பூனேவில் வசித்து வரும் ரஞ்சனா வாஹிலே 1980களில் திருமணமானபோது விறகு அடுப்பில் சமையல் செய்தார். அந்த புகையால் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது அவருக்கு 45 வயது இருக்கையில் தெரிய வந்தது. ரஞ்சனா நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவரது வீட்டில் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது.
நுரையீரல் நோய்
நகர்ப்புற மக்களை விட கிராமப்புறங்களில் வசிப்போருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படுவது 3 மடங்கு அதிகம் ஆகும். 1996ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலத்தில் கிராமங்களில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.54 சதவீதத்தில் இருந்து 14.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் அந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.46 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏழைகள்
நாள்பட்ட நுரையீரல் நோய் ஏழைகளை அதிக அளவில் தாக்குகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள்பட்ட மூச்சுக்குழாய் அலர்ஜி உள்ளவர்களில் 62.9 சதவீதம் பேர் பொருளாதார நிலை சரியில்லாதவர்கள், 3.2 சதவீதம் பேர் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தியா
பெரியவர்களில் 2.05 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா உள்ளது. ஆஸ்துமா பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் ஆகும். இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1960களில் 2 சதவீதமாக இருந்தது. ஆனால் அதுவே 1990களின் இறுதியில் 15 சதவீதமாக அதிகரித்தது.
சிகரெட்
சிகரெட், பீடி பிடிப்புது தான் ஆண்களுக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட முக்கியக் காரணம் ஆகும். இந்தியாவில் நான்கில் ஒரு ஆணுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. அவர்களால் அவர்களுக்கும், அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு மூச்சுக்குழாய் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என பெங்களூர் மணிபால் மருத்துவமனை டாக்டர் பத்மா சுந்தரம் தெரிவித்துள்ளார்.
மாசு
இந்தியாவில் வீடுகளில் உள்ள காற்று மாசுபடுவதால் பெண்களுக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படுகிறது. வெளியே வாகன புகை, பட்டாசுகள், தொழிற்சாலைளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவையால் நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் ஆஸ்துமா ஏற்படுகிறது.
காரணிகள்
பெயிண்ட் வாசனை, ஏர் ஃபிரஷனர்கள், புகை, வெயிலில் இருந்துவிட்டு ஏசி அறைக்குள் நுழைவது, குளிர்ச்சியான உணவு சாப்பிடுவது, மன அழுத்தம் உள்ளிட்டவையாலும் ஆஸ்துமா ஏற்படும். முட்டை, பால், கடலை, கோதுமை, மீன், உணவு பதப்படுத்தப்படும் பொருட்களாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது.
ஃபாஸ்ட் ஃபுட்
குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதற்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாரத்தில் மூன்று முறை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு 27 சதவீதம் உள்ளது. அதுவே வாரத்தில் மூன்று முறை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் பதின்வயதினருக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு 39 சதவீதம் ஆகும்.
மருந்துகள்
ஆஸ்துமாவை மருந்து மூலம் கட்டுப்படுத்தலாம். சத்தான உணவு முறையால் ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கலாம். உப்பு சாப்பிடுவதை குறைத்து அதிக பழங்களை உட்கொண்டால் ஆஸ்துமாவை தடுக்கலாம். வைட்டமின்கள் ஏ, சி, இ மற்றும் செலினியம் அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் ஒழுங்காக உடற்பயிற்சி செய்தால் அடிக்கடி அட்டாக் ஏற்படாது. ஆனால் உடற்பயிற்சியை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். சுவாச பயிற்சி செய்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது.