தானத்தில் புதியது “ஸ்டெம்செல்” தானம் – கொடையாளியால் உயிர் பிழைத்த சிறுவன்
பெங்களூர்: மருத்துவ உலகில் மனித உயிர் காக்கும் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன.
அவற்றுள் ஸ்டெம்செல் எனப்படும் குருத்தணு மாற்று சிகிச்சை முறையும் ஒன்றாகும்.
இந்த முறை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும் முன்பின் அறியாத ஒருவரைக் காப்பாற்ற முன்வரத் துணியும் மனிதர்கள் இன்னும் குறைவாகவே இருந்து வருகின்றனர்.
மரபணு சிகிச்சை முறை:
இந்த வகையான சிகிச்சைமுறையில் தலசீமியா என்ற மரபணு ஹீமோகுளோபின் நோய்க்குறைபாட்டால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பெங்களூரை சேர்ந்த கொடையாளி ஒருவரால் உயிர் பிழைத்துள்ளான்.
ஸ்டெம் செல் நன்கொடை:
இந்த மருத்துவ முறையில் உறவினரல்லாத ஒருவரின் நன்கொடையால் இந்தியாவில் காப்பாற்றப்பட்ட முதல் நோயாளி என்ற தகவலைப் பதிவு செய்துள்ளது.
தலசீமியா நோய்:
சென்ற வருடம் டெல்லியைச் சேர்ந்த கர்விட் கோயல் என்ற ஒரு வயது சிறுவனுக்கு தலசீமியா நோய்த்தாக்கம் இருப்பது உறுதி செய்த மருத்துவர்கள் அவனுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை முறையைப் பரிந்துரை செய்தனர்.
கொடையாளி தேவை:
அவனது உறவினர்களில் இந்த சிறுவனுக்குப் பொருத்தமான கொடையாளி கிடைக்காததால் வெளியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உதவிய பொறியாளர்:
இதனை அறிந்த பெங்களூரை சேர்ந்த சுமீத் மகாஜன் என்ற சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர் உதவ முன்வந்தார். இவர்களது நிறுவனத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின்மூலம் அவர் கொடையாளராக தனது பெயரைப் பதிவு செய்திருந்தார்.
வெற்றிபெற்ற சிகிச்சை:
சுமீத்தும், அவரது குடும்பத்தினரும் தந்த ஒத்துழைப்பில் கோயலுக்கான ஸ்டெம்செல் சிகிச்சைமுறை சென்ற வருடம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ சந்திப்பு:
ஒரு வருடத்திற்கு நோயாளி பற்றிய தகவல் கொடையாளிக்குத் தெரிவிக்கப்படக்கூடாது என்ற மருத்துவ விதிமுறைகளுக்குட்பட்டு இந்த வருடம் மார்ச் மாதமே சுமீத் அந்த சிறுவனை சந்தித்தார்.
பாதிக்கப்படும் குழந்தைகள்:
மற்ற சிறுவர்களைப் போல் அவனும் இனிமேல் ஆரோக்கிய வாழ்வினை மேற்கொள்ளக்கூடும் என்பதை நேரில் கண்டறிந்த அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 12,000 குழந்தைகள் இத்தகைய நோய்த்தாக்கத்துடன் இந்தியாவில் பிறக்கின்றன.
நோய்க்குறைபாடு சதவீதம்:
மேலும் இந்திய துணைக்கண்டத்தில் பிறக்கும் இவ்வகை நோய்க்குறைபாடுகளில் 10 சதவிகிதத்தினர் இந்தியாவில் பிறப்பதாகவும் , அவர்களில் 3-4 சதவிகிதம் மரபணுத்தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்றும் மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.