வேதத்தை ஸ்டீபன் ஹாங்கிங் புகழ்ந்ததாக அளந்துவிட்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்.. சர்ச்சையால் சிக்கல்
டெல்லி: ஐன்ஸ்டீனின் E=MC^2 கோட்பாட்டைவிட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை கூறியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் 105வது இந்திய அறிவியல் மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். நிகழ்ச்சியை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் துவங்கி வைத்து பேசினார்.
அப்போது, சமீபத்தில், புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங் மறைந்துவிட்டார். ஆனால், அவர், விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் E=Mc^2 சமன்பாட்டை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக கூறியுள்ளார் என்றார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், இதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஸ்டீபன் ஹாங்கிங் பெயரில் போலியாக ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் செயல்பட்டு வருகிறது. அதில்தான் இவ்வாறு ஒரு கருத்து 6 வருடங்கள் முன்பு இடம் பெற்றுள்ளது. அதையும் செயல்படுத்தும் அட்மின் பெயர் Hari. Scientist என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது இந்தியர்கள், அதிலும் வேதத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவரின் பேஸ்புக் ஐடி என்பது தெரிகிறது.
இதனிடையே மத்திய அமைச்சர் பேச்சு அதிலும், அறிவியல் தொழில்நுட்ப துறை பேச்சு இது என்பதால், சர்வதேச அளவில் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
தி டெலிகிராப் பத்திரிகை இதுகுறித்து விசாரித்து செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்டீபன் ஹாங்கிங் அறக்கட்டளையை சேர்ந்த பெர்ரி என்பவரிடம் இதுபற்றி கேட்ட அந்த பத்திரிகை, அவர் கூறியதையும் பிரசுரித்துள்ளது. அமைச்சர் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், எதையும் ஹாங்கிங் கூறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஹர்ஷவர்த்தன் பேச்சு இப்போது சர்ச்சையை அதிகரித்துவிட்டது.