சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு... போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனையொட்டி, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
இதே போல், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதே சமயம், சுவாமி ஐயப்பனை சபரிமலையில் குடியமர்த்தி பிரதிஷ்டை செய்ததை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தின விழா நடைபெறுகிறது. அதன்படி, பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
முதல் நாளான இன்று, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றவுள்ளார். இதையடுத்து, இன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர், நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் தொடங்கும்.
அதைத்தொடர்ந்து, புஷ்பாபிஷேகமும், படிபூஜையும் செய்த பின் நாளை இரவு 10:00 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதை யொட்டி, சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டை உள்பட முக்கிய பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வைகாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை நடை திறக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.