மல்லையாவை போல இன்னொரு சம்பவம்.. 5000 கோடி வங்கி மோசடி செய்த குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் தஞ்சம்
டெல்லி: குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் சந்தேசரா, மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார்.
இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப் பதிவு செய்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
துபாயில் கைது இல்லை
இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.
ஒப்பந்தம் இல்லை
சந்தேசரா மவரது சகோதரர் சேத்தன் சந்தேசரா, மைத்துனி திப்திபன் சந்தேசரா ஆகியோர் துபாயிலிருந்து ஏற்கனவே தப்பி, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் இருந்து கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப இதுவரை, எந்த ஒப்பந்தமும் கிடையாது என்பதால் நைஜீரியாவை இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
இன்டர்போல் உதவி
இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்தேசரா குடும்பத்தினரை பார்த்தால் அவர்களை கைது செய்ய, இந்திய விசாரணை அமைப்புகள் கேட்டுக்கொள்ள உள்ளன. இன்டர்போல் மூலமாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் திட்டமிட்டுள்ளன. நைஜீரியாவிற்கு சந்தேசரா குடும்பம் இந்திய பாஸ்போர்ட்டில் சென்றதா இல்லையா என்பது தெரியவில்லை.
பொய் தகவல்கள்
சந்தேசரா குடும்பத்தார், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 300க்கும் மேற்பட்ட ஷெல் மற்றும் பினாமி நிறுவனங்களை துவங்கி அவற்றுக்கு கடன் பணம் மடைமாற்றி விடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களையும், இந்த போலி நிறுவனங்களின் இயக்குநர்கள் என பொய்யாக கணக்கு காட்டி, போலியாக பேலன்ஸ் ஷீட் உருவாக்கி, கடன் பெற்றுள்ளனர்.
மல்லையா பாணி
வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, இங்கிலாந்து தப்பி சென்ற நிலையில், அவரை மத்திய பாஜக அரசுதான் தப்பவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில் சந்தேசரா குடும்பத்தார் அரபு அமீரகத்தில் இருந்தபோது, கைது செய்யாமல் அவர் நைஜீரியா சென்ற பிறகு முயற்சிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.