ராமர் கோயில் கட்ட கற்களை குவிக்கிறது விஎச்பி... அயோத்தியில் பதற்றம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மீண்டும் கற்களை விஎச்பி குவித்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லக்னோ: ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தியில் மீண்டும் கற்களை குவித்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் பரபரப்புக் கூடியுள்ளது.
பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சனையில், சர்சைக்குரிய இடத்தில் உள்ள நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முந்தைய சமாஜ்வாதி அரசு ராமர் கோயில் கட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து அயோத்தி ராம்சேவக்புரத்திற்கு படிகப்பாறைக் கற்கள் வந்திறங்கியுள்ளன. ராம பக்தர்கள் பணத்திற்கு பதிலாக கற்களாகத் தருமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கற்கள் வந்திறங்கியிருப்பதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, வெளிமாநிலங்களில் இருந்து அயோத்திக்கு கற்கள் கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும், ராமர், பசு, தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இது சாத்தியமாவதாகவும் விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்துள்ளார்.