தக்காளியும் கிடையாது... ஒன்னும் கிடையாது... பாகிஸ்தானுக்கு டாட்டா காட்டிய ம.பி விவசாயிகள்
போபால்: பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சுங்கவரியை 200 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அதிக அளவில் பழங்கள், சிமென்ட் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், அந்நாட்டுக்கு ரூ.3,482 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
தக்காளி ஏற்றுமதி நிறுத்தம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில், பணம் முக்கிய இல்லை, தேசப் பக்தியே முக்கியம் என மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டனர்.
தக்காளிகளுக்கு கிராக்கி
பாகிஸ்தானில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்ட (25 கிலோ) தக்காளியை அவர்கள் குறைந்த விலையில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்து வந்தனர். ஒவ்வொரு தக்காளியும் 150 கிராம் எடை கொண்டதாகவும், பார்ப்பதற்கு பெரிதாகவும் இருப்பதால், மத்தியப்பிரதேச தக்காளிகளுக்கு பாகிஸ்தானில் நல்ல கிராக்கி உள்ளது.
முதல்வர் பாராட்டு
விவசாயிகளின் இந்த முடிவை வரவேற்றுள்ள அம்மாநில முதல்வர் கமல் நாத், லாபத்தை பெரிதாக நினைக்காமல், தேசத்திற்காக விவசாயிகள் எடுத்த முடிவுக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார். ஜபுவா மாவட்ட விவசாயிகளின் செயல், ஒவ்வொரு குடிமகனும் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்த உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தக்க பாடம் புகட்ட வேண்டும்
பாகிஸ்தானில் விற்பனையாகும் 70 சதவீத காய்கறிகள் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 40 டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. அவைகளில் 90 சதவீதம் அளவிற்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை. தேசமே முக்கியம். நாங்கள் ஒன்றும் பாகிஸ்தானை நம்பி இல்லை. ரவி மற்றும் சிந்து வழியாக வழங்கப்படும் நீரை மத்திய அரசு நிறுத்த வேண்டும். பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ஜபுவா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.