இந்திய மகாஜனங்களே, உங்கள் உயிர் உங்கள் கையில்...
டெல்லி: 1991ம் ஆண்டு இரவு உணவை சாப்பிட்ட பிறகு மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் காரேகருக்கு(42) நெஞ்சு வலி ஏற்பட்டது. இரவில் வலி அதிகமாகவே அவரை அவரது டாக்டர் சகோதரர் மருத்துவமனையில் அனுமதித்தார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 70 ஆயிரம் பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதயத்திற்கு ரத்தம் செல்லும் நாளத்தில் அடைப்பு ஏற்படுகையில் மாரடைப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் ரத்த நாளங்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதே மாரடைப்பு ஏற்படக் காரணமாகும். ஆண்டுதோறும் 0.8 மில்லியன் பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
இதய நோய்
1980களில் ஏராளமான இந்தியர்களை இதய நோய் கொன்றது. 21வது நூற்றாண்டில் பல இந்தியர்களுக்கு எமனாக மாறியுள்ளது இதய நோய். 2012ல் இறந்த இந்தியர்களில் 4ல் ஒருவர் இதய நோயால் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக 2000ம் ஆண்டில் 5ல் ஒரு இந்தியர் இதய நோய்க்கு பலியானார்.
பக்கவாதம்
இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் சரிசமமாக உள்ளது. ஆனால் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 1.5 முறை அதிகம். இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் மாரடைப்பு ஏற்படுபவர்களில் 12 சதவீதம் பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள். 25 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்துஜா மருத்துவமனை மருத்துவர் பி.பி. அசோக் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு ஏன்?
காரேகரின் குடும்பத்தில் பரம்பரையாக மாரடைப்பு ஏற்படுவது இல்லை. அப்படி இருக்கையில் அவருக்கும், அவருடைய மற்றொரு சகோதரருக்கும் மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு அவர்களின் வாழ்க்கை முறை தான் காரணம் என்கின்றார் காரேகர். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டது, உடல் பருமன், புகைப்பிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவற்றால் காரேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஃபாஸ்ட் ஃபுட்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், ஸ்நாக்ஸ் ஆகியவற்றில் அதிகம் கொழுப்பு உள்ளது. அத்தகைய உணவுகள் இதய நோய்க்கு வழிவகுக்கிறது. உடல் பருமனால் இதய நோய் ஏற்படும் அபாயம் 23 சதவீதம் உள்ளது. இந்தியாவில் உடல் பருமனால் அவதிப்படுவோர் 30 மில்லியன் பேர் உள்ளனர். புகையிலையை மென்று திண்பது, புகைப்பிடத்தல் ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 10 சதவீதம் பேர் அதிக எடை உள்ளவர்களாக இருக்கின்றனர். உடல் எடை அதிகமாக இருப்பது இதயத்திற்கு நல்லது அல்ல.
புகையிலை
1995ம் ஆண்டில் இருந்து இந்திய ஆண்களிடையே புகையிலை பயன்பாடு அதிகமாக உள்ளது. இரண்டில் ஒரு ஆண் புகையிலையை பயன்படுத்துகிறார். அதே சமயம் 1995ம் ஆண்டில் இருந்து இதுவரை பெண்களிடையே புகையிலை பயன்பாடு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மது
அதிகமாக மது அருந்துவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். அது இதய நோய்க்கு வழிவகை செய்யும். தொடரந்து மது அருந்தினால் பக்கவாதமும் ஏற்படும். 15 வயதுள்ள சிறார்கள் ஆண்டுக்கு 33 லிட்டர் மது அருந்துகிறார்கள். அதேசமயம் அதே வயதுடைய பெண்கள் ஆண்டுக்கு 11 லிட்டர் மது அருந்துகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சை
மாரடைப்பு ஏற்பட்ட சில மாதங்கள் கழித்து காரேகருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் சைவத்திற்கு மாறினார், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டார், உடல் எடையை குறைத்தார், தினமும் உடற்பயிற்சி செய்யத் துவங்கினார், தியானம், யோகா, மன அழுத்தத்தை குறைக்கத் தேவையானவற்றை செய்து வருகிறார்.
வாழ்க்கை முறை
சத்தான உணவு, உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் இருப்பது, மது அருந்துவதை தவிர்ப்பது ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைக்க முடியும். தினமும் சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது.
நடைபயிற்சி
தினமும் 30 நிமிடங்கள் ஏரோபிக் எக்சர்சைஸ் செய்வதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 30 சதவீதம் குறைகிறது. தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதால் பக்கவாதம் ஏற்படுவதை 24 சதவீதம் குறைக்க முடியும். தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கலாம்.