லலித் மோடி விவகாரம்... எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தில் தொடர் அமளி
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று கூடியது. ராஜ்யசபாவில் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பியது. லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என்றும் விவாதத்தில் சுஷ்மா பங்கேற்பார் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடிய போது காங்கிரஸ் கட்சி கொண்டுவர முயன்ற ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. சுஷ்மா விவகாரம் தவிர்த்து காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்து வரும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாகவும் விவாதம் நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிசெய்த விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டன. தொடர்ச்சியான கடும் அமளியை அடுத்து சபை நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்யசபாவில் இப்பிரச்சனை எதிரொலித்ததால் அங்கும் சபை நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே நிலக்கரி ஊழலில் சிக்கி குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள தனது தலைவர் ஒருவருக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை கடுமையாக நெருக்கி வந்தார் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பது மற்றும் மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசின் வியாபம் ஊழல் விவகாரங்களும் நாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிரொலிக்கிறது.
ஆளும் பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர் அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.