எனக்கு தேவையில்லை இந்த ஊழல்வாதிகள்.. மறுபடியும் அதிரடி காட்டிய நிதிஷ் குமார்
ஊழல்வாதிகள் தரும் ஆதரவில் கிடைத்த முதல்வர் பதவி தேவையில்லை என்று கூறி ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார்.
பாட்னா: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் கூட்டணியில் பிளவு ஏற்படவே தனது முதல்வர் பதவியை உதறிவிட்டார் நிதிஷ்குமார். பீகாரின் நலன் கருதியே முதல்வர் பதவியில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் ரயில்வே ஓட்டல்களை வாடகைக்கு விட்டதில் செய்த ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும்,
பீகார் துணை முதல்வரான தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து தேஜஸ்வி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வரும் கூட்டணி கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் வலியுறுத்தினார். ஆனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
மெகா கூட்டணியில் பிளவு
இந்த விவகாரம் பீகாரில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியை காப்பாற்றும் முயற்சியிலும், பீகார் ஆட்சியை நீடிக்க செய்யும் சமரச முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டது. கடந்த வாரம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை டெல்லிக்கு அழைத்து பேசினார்.
தேஜஸ்வி விவகாரம்
அப்போது தேஜஸ்வி விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்டதும் நிதிஷ் குமார் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த
இயலாது என்று ராகுல்காந்தியின் சமரசத்தை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருப்பவருக்கு ராகுல் துணை போவதற்கு அவர் ஆச்சரியத்தையும் வெளியிட்டார்.
தேஜஸ்வி பிடிவாதம்.. நிதிஷ் அதிரடி
முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியும் தேஜஸ்வி பதவி விலக மறுத்ததை அடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் நிதிஷ்குமார். தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த நிதிஷ்குமார், மாநிலத்தின் நலன் கருதியே
தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார்.
பாஜக தயவில்
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளித்தார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சிக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.