சபரிமலை பக்தர்களோடு பல நூறு கி.மீ பயணித்த நாய்.. பாசமிகு பைரவா
பெங்களூர்: சபரிமலை பக்தர்களுடன் பாதயாத்திரை சென்ற நாய் ஒன்று மீண்டும் ரயிலில் பக்தர்களுடன் இணைந்து பயணித்து திரும்பி ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த 16 ஐயப்ப பக்தர்கள், டிசம்பர் 17ம் தேதி, ஒசூர் வழியாக சபரிமலைக்கு பயணித்துள்ளனர். ஒசூரில் மதன் குமார் என்ற பக்தர் இந்த குழுவோடு இணைந்துள்ளார். அவருடன் சுமார் 3 வயது மதிக்கத்தக்க தெருநாய் ஒன்றும் இணைந்து பயணித்துள்ளது. அந்த நாயுடன் மதன்குமாருக்கு ஏற்கனவே பழக்கம் இருந்ததால் அந்த நாய் பாசமாக பழகியுள்ளது.
ஆனால், டிசம்பர் 29ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி என்ற இடத்தில், விபத்தில் சிக்கி மதன்குமார் பலியானார். இதையடுத்து, நாயை விட்டுவிட்டு பிற ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். ஆனால், பம்பைக்கு சென்றபோது அங்கு ஏற்கனவே இந்த நாய் சென்றிருந்தது தெரியவந்தது. சுமார் 490 கி.மீ பயணித்தோ அல்லது நடந்தோ அந்த நாய் அங்கு சென்று சேர்ந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பது பக்தர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
இதனிடையே, எர்ணாகுளத்திற்கு பஸ்சுக்காக காத்திருந்தபோது அங்கும் இந்த நாய் வந்துள்ளது. எனவே, அதன் பாசத்திற்காக, அந்த நாயை தங்களுடனே பக்தர்கள் ரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர்.
A group of Ayyappa bhaktas were walking from Bengaluru to Sabarimala, 500+ KM.
— Kiran Kumar S (@KiranKS) January 11, 2018
A 3 year old dog joined them from nowhere. Even after a tragedy in their group it reached Sabarimala.
Finally it even got Ayyappa's darshan!!
Now named Bhairava and adopted by one bhakta in Bengaluru. pic.twitter.com/eJyNGnt5YL
பெங்களூருக்கு சென்ற அந்த நாய், இப்போது முருகன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்து வருகிறது. நடை பயணத்தின்போது பாலும், தண்ணீரும் மட்டுமே உணவாக உட்கொண்டுள்ளது அந்த நாய். எனவே அதற்கு மருத்துவர்களிடம் காண்பித்து முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு பைரவா என பெயரிடப்பட்டுள்ளது. இப்போது ஆரோக்கியமாக உள்ளதாம்.