பீகாரில் பரபரப்பு.. ஆபரேஷனுக்காக வைத்திருந்த காலை கவ்வி கொண்டு ஓடிய நாய்!
மருத்துவமனையில் நோயாளியின் காலை நாய் ஒன்று கவ்வி சென்றது.
பீகார்: எல்லாம் அந்த நாய் பண்ண வேலை... தெரு நாய் ஒன்று செய்த காரியத்தால அந்த ஆஸ்பத்திரி முழுக்க விசாரணை வளையத்துக்குள் மாட்டி கொண்டுள்ளது.
பீஹார் மாநிலம் புக்ஸாரில் ராம்நாத் மிஸ்ரா என்ற இளைஞர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயிலின் படிக்கட்டில் தொங்கி கொண்டு போனதால், எதிர்பாராத விதமாக தவறி விழவும், அவரது வலது கால் பரிதாபமாக வெட்டுண்டது. அதற்காக சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கால் அகற்றம்
அங்கு மிஸ்ராவின் பலமான காயத்தை பார்த்த டாக்டர்கள், அவரது காலை கண்டிப்பாக அகற்றியே ஆக வேண்டும் என்று சொல்லி விடவும், அதற்கு மிஸ்ராவும் சம்மதித்தார்.அதன்படியே ஆபரேஷன் நடந்து, மிஸ்ரா காலும் நீக்கப்பட்டது.
உள்ளே நுழைந்த நாய்
அகற்றப்பட்ட காலை மீண்டும் ஆபரேஷன் செய்து மிஸ்ராவுக்கு பொருத்துவதற்காக ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்கள் வைத்திருந்தார்கள். அந்த நேரம் பார்த்து தெரு நாய் ஒன்று திடீரென்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்துவிட்டது. நேராக ஆபரேஷன் தியேட்டருக்கு சென்ற நாய், அங்கு டிரஸ்ஸிங் செய்து தயாராக டேபிளில் வைத்திருந்த மிஸ்ராவின் காலை தூக்கி கொண்டு ஓடியது.
நோயாளிகள் அதிர்ச்சி
நாய் தன் வாயில் காலை கவ்விக்கொண்டு ஓடியதை பார்த்த டாக்டர்கள், மற்றும் அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் ஷாக் ஆகி நின்றனர். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் நாயை விரட்டி பிடிக்க முயன்றபோதும் வெளியே ஓடிவிட்டது. தெருவில் நாய் காலுடன் ஓடியதும் தெருவில் இருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
விசாரணை ஆரம்பம்
மருத்துவமனைக்குள் நாய் புகுந்து நோயாளியின் காலை எடுத்து சென்றது தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நாய் உள்ளே எப்படி வந்தது? ஆபரேஷன் தியேட்டர் கதவு ஏன் திறந்திருந்தது? பொறுப்பாளர்கள் யார்? என்பன குறித்தெல்லாம் விசாரணை நடைபெறுகிறது. இப்போது மிஸ்ராவின் கால் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை!!