சபரிமலையில் கடும் கட்டுப்பாடு - பக்தர்கள் கண்குளிர ஐயப்ப தரிசனம் - வியாபாரிகளுக்கு பாதிப்பு
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் டோலி தூக்கும் பணியாளர்கள், மலைப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை: சபரிமலையில் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கூட்டம் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கண் குளிர சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனுக்காக காத்திருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திங்கட்கிழமை திறக்கப்பட்டது. கார்த்திகை 1ஆம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டிருந்தன.
கோவிலில் பரிசோதனை
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சான்றிதழ்களுடன் வந்தவர்களிடம் இருந்த சான்றிதழ்கள் நிலக்கல்லில் பரிசோதிக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சென்றவர்கள் மருத்துவ பரிசோதனை எடுத்து 24 மணி நேரம் கடந்திருந்தால், அவர்களுக்கு தனியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
கடும் கட்டுப்பாடு
முன்பதிவு செய்த போது ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு முதற்கட்டமாக நிலக்கல்லிலும் தொடர்ந்து பம்பை மற்றும் வலியநடை பந்தல் ஆகிய பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.
நெரிசலின்றி தரிசனம்
குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு இலையில் பிரசாதம் வழங்கினார்.
வியாபாரிகள் கவலை
பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் பம்பை, எரிமேலி, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கடைகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் சபரிமலை சீசனுக்காக காத்திருந்த நிலையில், அவர்களின் வாழ்வாதாராமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா
கேரள அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.