தலாக்.. தலாக்குக்கு பதில் புதிய விவாகரத்து சட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
முத்தலாக் முறைக்குப் பதிலாக புதிய விவாகரத்து சட்டத்தை கொண்டுவருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் இஸ்லாமியர்கள் பின்பற்றும் முத்தலாக் முறைக்குப் பதிலாக, வேறு ஒரு புதிய விவாகரத்து சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
'முத்தலாக்' என்பது இந்தியை குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும், அதேநேரம் முஸ்லிம்களின் பல தார திருமணம் குறித்து விசாரணை நடத்தாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வாய்வழியாக மூன்று முறை தலாக் என்று தெரிவித்து மணமுறிவு பெற்றுக்கொள்ளும் நடைமுறை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து ஷாயரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது.
இதுதவிர, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கு ஒன்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, இம்மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
5 நீதிபதிகள் விசாரணை
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்தலாக் வழக்கைப் பொறுத்தமட்டில், இந்த அமர்வு விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.
4 அம்சங்கள்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்த அம்சங்கள், " முத்தலாக் நடைமுறை இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக உள்ளதா?, முத்தலாக் என்பது முக்கியமான மத நடைமுறை என்றால், அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அமல்படுத்த வேண்டிய அம்சமா?, பல தார மணம் மற்றும் நிக்கா ஹலாலா போன்ற விஷயங்கள் குறித்து விசாரணை நடத்த மாட்டோம். முத்தலாக் நடைமுறையின் சட்ட அங்கீகாரம் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும், முத்தலாக் நடைமுறை மத அடிப் படைகளில் ஒன்று என்றும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும் என்றும் நாங்கள் முடிவுக்கு வந்தால் அதில் தலையிட மாட்டோம்." என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முடிவெடுத்தது.
மத்திய அரசின் வழக்கறிஞர் வாதம்
முத்தலாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், பாகிஸ்தான், ஈரான், துருக்கி, இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள்கூட திருமண விவாகரத்து தொடர்பாக தனி திருமணச் சட்டத்தை அமல்படுத்தி வருகின்றன என்றார். ஆனால் ஆனால் மதச் சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு திருமணச் சட்டம் என்று எதுவும் தனியாக இல்லாமல், முத்தலாக் முறையில் விவாகரத்துகள் நடைபெறுகின்றன. இது சரியான அணுகுமுறையில்லை என்றார்.
புதிய சட்டம்
மதச் சார்பற்ற நாடு என்ற முறையில்தான் இந்த விவகாரத்தைக் கையாளவேண்டும். இதில் மத அடையாளங்கள் எதுவும் பூசக்கூடாது. முத்தலாக் முறையைக் கைவிட்டு அதற்குப் பதிலாக இஸ்லாமிய பெண்களின் நலனைப் பாதுக்காக்கும் வகையில் சிறப்பான வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவரவுள்ளது. இதற்கு இந்திய இஸ்லாமிய சமூகத்தினர் முழு ஒத்துழைப்புக்கொடுத்து உதவிட வேண்டும் என்றும், அதன் மூலம் இணக்கமான சூழல் உருவாகிடும், இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என்றும் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.