முழு அடைப்பால் திணறும் கேரளா – வெறிச்சோடிய சாலைகள்; விரக்தியில் மக்கள்!
கோவை: கேரளாவில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெற்ற அமளி மற்றும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டு வருகின்றது.
கேரள சட்டசபையில் நிதி அமைச்சர் மாணி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது எதிர்க்கட்சிகளுக்கும், சபை பாதுகாவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 எம்.எல்.ஏக்களும், சபை காவலர்கள் 13 பேரும் காயமடைந்தனர்.
சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று முழு அடைப்பு நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்தன.
அதன்படி கேரளாவில் இன்று காலை முழு அடைப்பு தொடங்கியது. எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ஓடாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆட்டோக்கள், கார்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு தினமும் 6 பஸ்கள் புறப்பட்டுச்செல்கின்றன.
இந்த பஸ்கள் அனைத்தும் இன்று அடியோடு நிறுத்தப்பட்டன. கேரளாவில் இருந்தும் நீலகிரிக்கு பஸ்கள் எதுவும் வரவில்லை. பொள்ளாச்சிசயில் இருந்து கேரளாவுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் 10 பஸ்களையும், கேரள போக்குவரத்து கழகம் 23 பஸ்களையும் இயக்குகின்றன. தனியார் 15 பஸ்களை இயக்குகின்றனர்.
இந்த பஸ்கள் அனைத்தும் இன்று இயங்கவில்லை. இதனால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்துமிடம் வெறிச்சோடி காணப்பட்டது.
கேரளாவில் முழு அடைப்பு நடைபெறுவது தெரியாமல் இன்று பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு ஏராளமான பயணிகள் வந்தனர். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் 20 பஸ்களையும், கேரள போக்குவரத்து கழகம் 26 பஸ்களையும் இயங்குகின்றன.
இதில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் 13 பஸ்கள் பாலக்காட்டுக்கும், கொடுவாயூர், மீனாட்சிபுரம், தத்தமங்கலத்துக்கு 5 பஸ்களும், திருச்சூர், குருவாயூருக்கு தலா 1 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
அந்த பஸ்கள் எதுவும் இன்று புறப்பட்டு செல்லவில்லை. இதனால் உக்கடம் பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் நிறுத்துமிடம் வெறிச்சோடி காணப்பட்டது. கேரளாவில் இருந்தும் பஸ்கள் எதுவும் வரவில்லை.
உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் ஓடாததால் கோவை ரயில் நிலையத்தில் இன்று கேரள பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கேரளாவுக்கு செல்லும் ரயில்களில் படிக்கட்டு வரை நின்று பயணிகள் பயணம் செய்தனர்.