அதிமுக வலுவாக இருப்பது பாஜகவுக்குத்தான் நல்லது...சொல்கிறார் முரளிதரராவ்!
டெல்லி: அதிமுக வலுவான ஒருங்கிணைந்த கட்சியாக இருப்பது பாஜகவுக்கு நல்லதுதான் என்றும் அக்கட்சிக்குள் நிலவும் குழப்பதை அவர்கள் விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது, ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில், டிடிவி தினகரன் கோஷ்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் கோஷ்டி என 3 கோஷ்டிகள் உருவாகியுள்ளன.
இதனால், அதிமுக ஆட்சி எந்நேரத்திலும் கலையக் கூடும் என்றும், அதிமுக கட்சியே அழிந்து போகும் என்றும், தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
இந்த பிரச்னைக்கு எல்லாம் பாஜக தான் முக்கிய காரணம் என்றும், குற்றம்சாட்டப்படுகிறது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழகத்தில் அதிமுக வலுவான நிலையில் இருப்பது பாஜகவுக்கு மிகவும் சாதகமான ஒன்றே என தெரிவித்தார். அதிமுக எந்த காலத்திலும், பாஜகவுக்கு சாதகமாக செயல்படக்கூடிய கட்சிதான் என்பதால், எங்களுக்கு இதில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
அதிமுக வலுவாக இருப்பதுதான் நல்லது. அவர்கள் முதலில், அவர்களுக்குள் நிலவும் பிரச்னையை தீர்க்க வேண்டும், என்றார்.