மும்பை டிராபிக்: ஆட்டோவிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்
மும்பை: மும்பையில், பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி, டிராபிக்கில் சிக்கிக் கொண்டதால், அப்பெண்ணுக்கு ஆட்டோவிலேயே வைத்து அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மும்பை அசால்வா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அக்பரின் மனைவி சீமா. நிறைமாத கர்ப்பிணியான சீமாவுக்கு நேற்று பிரசவ வலி உண்டானதால், கணவரின் ஆட்டோவிலேயே மருத்துவமனைக்கு கிளம்பினார்.
மருத்துவமனைக்கு அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவர்கள் பயணித்த ஆட்டோ டிராபிக்கில் சிக்கியது. இறங்கி நடந்து செல்லவும் இயலாத அளவுக்கு சீமாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் செய்வதறியாது குழம்பி நின்றார் அவரது கணவர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் சீமாவுக்கு ஆட்டோவில் வைத்தே அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் ஒருவழியாக டிராபிக் சரி செய்யப்பட்டவுடன் சீமாவும், குழந்தையும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.