டெல்லி போலீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை
சென்னை: ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தில் குதிப்போம் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வலுவடைந்தது
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பாசிச சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக்கழக மாணவர்களும் ,கல்லூரி மாணவர்களும், இப்போராட்டத்தில் இணைந்துள்ளார்கள். இப்போராட்டங்கள் வலுவடைந்து வருகிற
நிலையில் இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கிறது மத்திய அரசு.
கோரமுகம்
எனவே டெல்லியில் போராடிய ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீது தனது ஏவலாட்களான டெல்லி காவல்துறையை
ஏவி விட்டிருக்கிறதுஅரசு.அமைதியான முறையில் போராடிய மாணவர்கள்மீது தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் பாசிசத்தின் கோரப்பற்களை
கோரமுகத்தை காட்டியிருக்கிறது டெல்லி காவல்துறை.
டெல்லி போலீஸ்
முக்கியமாக போராடும் மாணவிகள் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக் கழக துணை வேந்தரின் அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் விடுதிக்குள்ளும் நுழைந்து வெறியாட்டம் ஆடியிருக்கிறது டெல்லி காவல்துறை.
எச்சரிக்கை
போராடும் ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக் கழக மாணவர்களோடு தோளோடு தோள் நிற்கிறது நமது கூட்டமைப்பு. அது மட்டுமன்றி இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்; இல்லையேல் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு குதிக்கும் என்றும் எச்சரிக்கிறது.