பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்.. கொளுத்தும் வெயிலில் நிர்வாணமாக நிற்க வைத்த கொடூரம்.. வீடியோ
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் புங்கனூரில் உள்ள ஒரு பள்ளியில் தாமதமாக வந்ததாக 3-ஆம் வகுப்பு படிக்கும் 9 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களை தனியார் பள்ளி நிர்வாகம் வளாகத்தில் நிர்வாணமாக நிற்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போராட்டம்
இந்த சம்பவத்தை தனியார் பள்ளி நிர்வாகமும் டிவிஷனல் கல்வி அலுவலரும் மறைக்க பார்ப்பதாக குழந்தைகள் உரிமை நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பள்ளி முன் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
ரத்து
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் பாண்டுரங்க சுவாமி கூறுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் உரிமைகளை பள்ளி நிர்வாகம் மீறி விட்டது. 2019-2020-ஆம் ஆண்டுக்கான பள்ளி பதிவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.
கல்லின் மீது
இது முதல் முறையல்ல, ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரியில் எலுரு என்ற ஊரில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்று வீட்டுப்பாடம் செய்யாத ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவரை இழுத்து வந்து வெட்ட வெயிலில் துணியில்லாமல் ஒரு கல்லின் மீது அமர வைத்தது.
வெயில்
அதே ஆண்டு ஒரு அரசு பள்ளியின் ஆசிரியர் ஒருவர், வீட்டுப்பாடம் செய்யாத இரு மாணவர்களின் சட்டையை கழற்ற வைத்து 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தது குறிப்பிடத்தக்கது.