கொலை, பலாத்காரம், டேட்டிங்... ஆசிரியைகளை மிரட்டும் மாணவர்கள்... கலி முத்திருச்சோ?
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் ஆசிரியைகளை பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். குர்கானில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
டெல்லி: குருகிராமில் தனியார் பள்ளியில் ஆசிரியையும் அவரது மகளையும் பலாத்காரம் செய்துவிடுவதாக மாணவர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
இந்த அதிர்ச்சி விலகுவதற்கு அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் ஆசிரியையை டேட்டிங்குக்கு அழைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று படித்திருக்கிறோம். ஆசிரியர்களை தெய்வத்திற்கு சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி ஆசிரியையை கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் துணிந்து விட்டனர். இப்போதோ பலாத்காரம் செய்து விடுவதாக 13வயது மாணவர்கள் மிரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமுக வலைத்தளத்தில் மிரட்டல்
ஹரியானா மாநிலம் குருகிராமில் தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக ஆசிரியையும், அவரின் மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
சிறுமிக்கு மன அதிர்ச்சி
ஆசிரியையின் மகளுக்கு 13 வயதாகிறது. அதே பள்ளியில் மிரட்டிய பள்ளி மாணவருடன் படித்து வருகிறார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாக நடைபெற்ற இந்த சம்பவத்திலிருந்து மீளாத அந்த சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் வகுப்புக்கு திரும்பவில்லை.
13 வயது மாணவர் அழைப்பு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வகுப்பு ஆசிரியையை டேட்டிங் மற்றும் உறவுக்கும் அழைத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாணவர்களும் நீக்கம்
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடமிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அம்மாணவர்கள் தற்போது பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் காவல்துறையினருக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை.
ஆலோசனை அவசியம்
இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பு விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் ஒழுக்கத்திற்கு பள்ளி மட்டும் அல்லாது பெற்றோர்களும் பொறுப்பானவர்கள் என்பதால் தம்முடைய குழந்தைகளை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
கலி முற்றிவிட்டதோ
கலி முற்றிவிட்டது என்பார்கள். கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும். பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது கலி முத்திப்போய் விட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.