மல்லையாவிற்கு அருண் ஜேட்லி செய்த "முக்கிய உதவி''.. அன்றே சொன்ன சு.சாமி.. பாஜகவில் புயல்!
விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக கூறியுள்ளார்.
டெல்லி: விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ஏற்கனவே டிவிட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் விஜய் மல்லையா. மோசடி செய்ததோடு லண்டனுக்கு பறந்து எஸ்கேப் ஆனார்.
அவரை இன்னும் இந்தியா கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுவதாக மத்திய அரசு கூறிக்கொண்டுள்ளது. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
நிதி அமைச்சர்
இந்த நிலையில் தான் வெளிநாடு செல்லும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தாக இவர் கூறியுள்ளார். அதாவது கடைசியாக நாட்டை விட்டு செல்லும் முன் அருண் ஜேட்லியை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை சந்தித்துவிட்டு 2 மணி நேரம் கழித்து வெளிநாடு சென்றவர் அதன்பின் இந்தியா வரவே இல்லை.
சுப்பிரமணியன் சாமி
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ஏற்கனவே இதுகுறித்து குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஜூன் 12ம் தேதி சுப்பிரமணியன் சாமி வெளியிட்டு இருந்த டிவிட்டர் போஸ்டில், ''லுக் அவுட் நோட்டிஸ் கொடுத்த பின்பும் மல்லையாவால் வெளியேற முடியாது. அதனால் அவர் டெல்லி வந்துள்ளார். வந்து மிக சக்தி வாய்ந்த நபர் ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பின்பே, அவரை வெளியே செல்ல அனுமதிக்கும்படி லுக் அவுட் நோட்டிஸ் மாற்றப்பட்டது. அந்த சக்தி படைத்த நபர் யார்?'' என்று அப்போதே கேட்டு இருந்தார்.
அதே கட்சியை சேர்ந்த நபர்
இந்த நிலையில்தான் அதே கட்சியை சேர்ந்த அருண் ஜேட்லிதான் அந்த சக்தி வாய்ந்த நபர் என்று மல்லையா பேட்டி மூலம் தெரிகிறது. ஆனால் இதற்கு இப்போதுவரை சுப்பிரமணியன் சாமி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இதை வைத்து பாஜகவை டிவிட்டரில் எல்லோரும் கலாய்த்து வருகிறார்கள்.
மறுப்பு தெரிவித்தார்
சுப்பிரமணியன் சாமி, காங்கிரஸ் கட்சியில்தான் யாரையோ சொல்கிறார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் கடைசியில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் மாட்டியுள்ளார். ஆனால் அருண் ஜேட்லி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.