காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக.. வாட்ஸ்அப்பில் ராஜினாமா கடிதம் அனுப்பிய எஸ்.ஐ!
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறை கணினிமயமாக்கப்பட்டு 176 போலீஸ் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக 'வாட்ஸ்-அப்'புடனும் இந்த அவசர உதவி எண் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு இந்த எண்ணுக்கு கான்பூர் டீகட் மாவட்ட, ரசுலாபாத் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வினோத் குமார் 'வாட்ஸ்-அப்' மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
மேலதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியாததால் தனது பணியை ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒழுங்கீனமாக, ராஜினாமா கடிதம் அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டரிடம், விசாரிக்க மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐ.ஜி. அஷுதோஷ் பான்டே, தெரிவித்துள்ளார்.