கான்பூரில் சுப்பிரமணியம் சாமி கார் மீது, கல், தக்காளி, அழுகிய முட்டை வீச்சு!
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்லூரிக்கு வந்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமியின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் முட்டை, தக்காளி ஆகியவற்றையும் அவரது கார் மீது வீசித் தாக்கினர்.
அது போக இங்க்கும் அவரது கார் மீது வீசப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாமிக்கு கருப்புக் கொடியும் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கான்பூரின் நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள விஎஸ்எஸ்டி கல்லூரியில் ஒரு விழாவில் பங்கேற்க சாமி வந்தபோதுதான் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. கான்பூர் கல்லூரியில் சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க சாமி வந்தார்.
அவர் மீதான தாக்குதலுக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. நேற்றுதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டக் கோரி சுப்பிரமணியம் சாமி தாக்கல் செய்திருந்த மனுவை, அதுதொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.