சொந்த தொகுதியிலேயே ஜெயிக்க முடியாதவங்களுக்கு எதுக்கு பதவி? யோகி மீது சு.சுவாமி பாய்ச்சல்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மிக கடுமையாக சாடியுள்ளார் பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி.
இடைத்தேர்தல் தோல்வி தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர்கள் பதவி கொடுப்பது பற்றி பாஜக ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சாடியுள்ளார். அதேபோல பாஜக மூத்த தலைவர் ராம்காந்த் யாதவும் யோகியை சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக ராம்காந்த் யாதவ் கூறுகையில், வழிபாடுகளில் கவனம் செலுத்துகிறவர்களை முதல்வராக்கி இருக்கிறோம். ஒரு அரசாங்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே அரசாங்கம் சொந்தம் அல்ல என்றார்.