சினிமாவில் நடிப்பதே நல்லது.. ரஜினிக்கு அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது.. சு.சாமி !
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வன்மையாக கண்டிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் சரிப்பட்டு வராது, சினிமாவில் நடிப்பதே நல்லது என்று பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 15ந் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி, தன் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய கருத்து அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் அது அவரது விருப்பம் உரிமை என்று கூறினாலும், பல அரசியல் கட்சியினர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ரஜினிகாந்த்திற்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என அதன் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரை ரஜினி விரைவில் சந்திக்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை சந்தோஷப்படுத்தலாம்.
அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜர் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.