"குண்டு" வைத்து விட்டார் ரகுராம் ராஜன்.. டிசம்பரில் வெடிக்கும்.. பீதி கிளப்பும் சாமி!
டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதார அமைப்பில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது வரும் டிசம்பர் மாதம் வெடிக்கும் என்றும் புதிய குண்டை வீசியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.
சர்ச்சைக் கருத்துக்களுக்குப் பேர் போனவர் பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சாமி. சமீபகாலமான ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த மாதம் இது தொடர்பாக இரண்டு முறை பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். அது மட்டுமின்றி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்திலும் ரகுராம் ராஜனை பற்றி அவர் விமர்சித்து வருகிறார். ஆனால், ரகுராம் ராஜன் விவகாரம் தொடர்பாக சாமியின் தனிநபர் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், ரகுராம் ராஜன் மீது புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் சுப்பிரமணிய சாமி. அதாவது, ரகுராம் ராஜன் இந்திய பொருளாதார அமைப்பில் டைம்பாம் ஒன்றை வைத்துள்ளதாகவும், அது வரும் டிசம்பர் மாதம் வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
R3 planted a time bomb in our financial system in 2013. It is timed for Dec 2016. The redeemable billion in f.e. to be paid out by banks
— Subramanian Swamy (@Swamy39) June 8, 2016
மேலும், இந்த டைம் பாமானது கடந்த 2013ம் ஆண்டு வைக்கப்பட்டது என்றும், அது இந்தாண்டு டிசம்பர் மாதம் வெடிப்பது போல் அப்போதே டைம் செட் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக ரகுராம் ராஜன் மீது சுப்பிரமணிய சாமி சுமார் ஆறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், ‘இந்திய பொருளாதாரம் குறித்த தவறான தகவல்களை அவர் தருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறி விட்டார். அவர் முழுமையான இந்தியராக செயல்படவில்லை' போன்றவை புகார்களாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ராஜன் அளித்த விளக்கத்தில், ‘சாமியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அதோடு ஒவ்வொருவரும் தனது தேச உணர்வை வெளிப்படுத்துவதில் வேறுபடுவர்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ராஜன் மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் சாமி. இதற்கு அவர் என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.