சசி தரூர் மனைவி மர்ம மரணம்..விடுவதாக இல்லை சு.சுவாமி.. வழக்கு தொடருகிறார்!
புவனேஸ்வர்: முன்னாள் மத்திய அமைச்சர் சதி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமாக இறந்தது குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, பொது நல வழக்குத் தொடுக்கப் போவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கோரி பல முறை வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். ஆனால் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு எந்த விவகாரத்திலும் நான் நீதிமன்றத்தை அணுகவில்லை.
தற்போது டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரை விடப்போவதில்லை. அவரது மனைவி சுனந்தா இறந்த சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரிக்கக் கோரி பொது நல வழக்கு தொடரவிருக்கிறேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.