பாஜக-சிவசேனா கூட்டணியை உருவாக்க சு.சாமி பகீரத பிரயத்தனம்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளை ஒரே கூட்டணியில் இணைத்துவிட சுப்பிரமணியசாமி கடுமையான பிரயத்தனம் செய்துவருகிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மைக்கும் குறைவான எம்.எல்.ஏக்களே உள்ள நிலையில் மைனாரிட்டி அரசாக பாஜக ஆட்சி செய்ய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாஜக அரசில் சிவசேனா கட்சியை பங்கேற்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அப்போது பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மராட்டிய அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் உத்தவ் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.இந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணிய சாமி நிருபர்களிடம் கூறியதாவது: உத்தவ் தாக்கரேவை சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும். பாஜக அரசில் சிவசேனாவை பங்கேற்க செய்தால் தான் மராட்டியத்தில் நிலையான ஆட்சி அமையும். மேலும், இந்துத்வா கொள்கைக்கும் வலு சேர்க்கும்.
நான் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே சுப்பிரமணியன்சுவாமியின் பேச்சுவார்த்தைக்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று பாஜக கைவிரித்துள்ளது. மூத்த பாஜக தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே பாஜக-சிவசேனாவை இணைக்க சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில் பிரயத்தனப்பட்டு வருவது தெளிவாகியுள்ளது.