எனக்கு காசுதான் முக்கியம்.. நாடாளுமன்றம் நடக்காட்டி எனக்கென்ன.. சாமி!
பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் 23 நாட்கள் சம்பளத்தை விட்டு தருவோம் என்பதற்கு சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
டெல்லி: பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் 23 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியதற்காக ஊதியத்தை பெற மாட்டோம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமாரின் அறிவிப்புக்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றம் 23 நாட்கள் முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார், பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் 23 நாட்களுக்கான ஊதியத்தை பெற மாட்டோம் என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் பதிவில் கூறுகையில், மக்கள் பணிகளை ஆற்றுவதற்கே எம்பிக்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அவ்வாறிருக்கையில் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலால் இரு அவைகளும் 23 நாட்களுக்கு இயங்கவில்லை. அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாம் தயாராக இருந்தபோதிலும் நாடாளுமன்றம் 23 நாட்களுக்கு மட்டுமே இயங்கியது.
படிகளை வாங்க மாட்டோம்
எனவே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் எம்பிக்கள் அந்த 23 நாட்களுக்கான ஊதியம் மற்றும் படிகளை பெற மாட்டோம் என்று அறிவித்திருந்தார். இதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எப்படி விட்டுக் கொடுக்க முடியும்
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தினமும் நாடாளுமன்றத்துக்கு சென்று வந்தேன். அப்படியிருக்கும்போது நாடாளுமன்றம் இயங்காமல் முடங்கியது எப்படி என் தவறாகும். மேலும் குடியரசு தலைவரின் பிரதிநிதியாக உள்ள நான் அவர் கூறாமல் ஊதியத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.
ஏட்டிக்கு போட்டி
நாடாளுமன்றம் முடங்கியதற்கான சம்பளத்தை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சாமி கூறியுள்ளார். பொதுவாக ஏட்டிக்கு போட்டியாக பேசுவதே சுவாமியின் வழக்கம்.
சொந்த கட்சிக்கு எதிர்ப்பு
ஆர்கே நகர் தேர்தலில் சொந்த கட்சி வேட்பாளருக்கு பிரசாரம் செய்யாமல் தினகரனுக்கு பிரசாரம் செய்தவர் சுவாமி. பெரும்பாலான விஷயங்களில் சொந்த கட்சிக்கு எதிராக கருத்து சொல்வதிலேயே சுவாமி குறியாக இருப்பார்.