ரகுராம் ராஜனால் பொருளாதாரம் தரை மட்டமாகப் போகிறது..: சு.சாமி போடும் குண்டு!
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான சரிவை சந்திக்க இருப்பதாகவும், அதற்குக் காரணமான ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை மாற்றி விட்டு, நன்கு தேர்ந்த அனுபவசாலியான பெங்களூரு ஐஐஎம் பேராசிரியரான வைத்தியநாதன் போன்றவரை அப்பணியில் அமர வைக்க வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைப் பேச்சுகளால் அடிக்கடி பிரச்சினைகளை கிளப்பி வருபவர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. அவர் தற்போது இந்தியப் பொருளாதாரம் குறித்த புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அவர், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். தவிர இது தொடர்பாக அவர் தி இந்து ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது:-
சரிவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்...
இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்திக்க உள்ளது. வானில் இருந்து ஒரு விமானம் தரையில் மோதி விழுவது போல் அந்தச் சரிவானது இருக்கும். இதனை நான் பல்வேறு பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறேன்.
மோடி அரசு...
இந்தச் சரிவானது வரும் நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இந்தப் பொருளாதார சரிவை எதிர்கொள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு ஆயத்த நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
நெருக்கடி கால நிர்வாகக் குழு...
இந்த பொருளாதார சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற உடனடியாக நெருக்கடி கால நிர்வாகக் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதில் தேர்ந்த பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இடம்பெற வேண்டும்.
சேமிப்பு பழக்கம் குறைந்தது...
மேலும், மக்களிடம் சேமிப்புப் பழக்கம் குறைந்து போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். அதேபோல், ஏற்றுமதி, இறக்குமதியாகும் வர்த்தகப் பொருட்களின் அளவும் குறைந்துள்ளது. இதற்கான காரணமும் கண்டறியப்பட வேண்டியது அவசியம்.
முதலீடுகளும் குறைவு...
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட தற்போது திட்டங்களுக்கான முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இது நல்லதல்ல.
ரகுராம் ராஜன் காரணம்...
இந்தியப் பொருளாதாரம் இத்தகைய சரிவைச் சந்திக்க ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனும் முக்கியக் காரணம் ஆகும். பணவீக்கம் எனும் நோயைச் சரி செய்ய வேண்டிய மருத்துவரான அவர், நோயாளியையே கொல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தான் இதற்கு முக்கியக் காரணம்.
அவருக்கு பதில் இவர்...
இந்த நிலையைச் சமாளிக்க உடனடியாக ரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்குப் பதில் பெங்களூரு ஐஐஎம் பொருளாதார பேராசிரியர் வைத்தியநாதன் போன்றோரை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.