ரஜினி படிப்பறிவில்லாதவர்... இது வெறும் ஊடக ஹைப்... சுப்ரமணியன் சாமி நக்கல்!
ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக மட்டும் தான் சொல்லி இருக்கிறார் அவரிடம் எந்த கொள்கையும் இல்லை, அவர் படிப்பறிவில்லாதவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
டெல்லி : நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக மட்டும் தான் சொல்லி இருக்கிறார், அதற்கு மேல் அவரிடம் எந்த விவரமும் இல்லை, ரஜினி படிக்காதவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, சட்டசபை தேர்தலின் போது தனிக்கட்சி தொடங்குவேன் என்று அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த சமயத்தில் முடிவு செய்வேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி பாஜகவுடன் இணைவார் என்றும் கணித்துள்ளார்.
இதனிடையே ரஜினியின் அரசியல் வருகை குறித்து சுப்ரமணியன் சாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஏன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவரிடம் எந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. ரஜினியை ஊடகங்கள் தான் பெரிதாகக் காட்டுகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள் என்றும் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.
He only announced he is entering politics, had no details or documents, he is illiterate. Its only media hype, people of Tamil Nadu are intelligent: Subramanian Swamy, BJP on #Rajinikanth pic.twitter.com/4dDZWLGxdd
— ANI (@ANI) December 31, 2017