துபாயில் சிக்கிய தாவூத் இப்ராஹிம் கூட்டாளி: தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு வாழ்த்து தெரிவித்த சு.சாமி
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி ஃபரூக் தக்லா கைது செய்யப்பட்டது குறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : துபாய் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி ஃபரூக் தக்லா மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி தேசியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்தியாவில் நடந்த தீவிரவாத வன்முறைச் செயல்களில் இது மிகப்பெரிய சம்பவமாகக் கருதப்படுகிறது.
இந்த வழக்கில் மும்பையின் நிழல் உலக தாதாவாக வலம் வந்த, தாவூத் இப்ராஹிம் சம்பந்தப்பட்டு இருப்பதால், அவரை முக்கிய குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்தது.
இதில் தலைமறைவான தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளி ஃபரூக் தக்லா குறித்து சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் 1995ஆம் ஆண்டு, ஃபரூக் தக்லாவிற்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பரூக் தக்லா,இன்று துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை மும்பை அழைத்து வந்து, தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், இது இந்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான ஃபரூக் தக்லா சிக்கி இருப்பது தாவூத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
We need to compliment NSA Doval for Farooq Takla coming in CBI kitty. Dawood not far off?
— Subramanian Swamy (@Swamy39) March 8, 2018
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், 'தாவூத்தின் முக்கிய கூட்டாளி ஃபரூக் தக்லாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் வாழ்த்துகள். தாவூத் சிக்குவது வெகு தொலைவில் இல்லை' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.