ஜெயிலில் ஏ.சி., வை-பை, லேப்-டாப் வசதிக்காக ரூ.1.23 கோடி செலுத்தும் சுப்ரதா ராய்!
டெல்லி: திகார் ஜெயிலில் ஏ.சி., வை-பை, லேப்-டாப் உள்ளிட்ட வசதிக்காக ரூ.1.23 கோடியை சிறை நிர்வாகத்திற்கு சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் செலுத்தியுள்ளார்.
முறைகேடாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க ரூ.5000 கோடி பிணைத் தொகையை ரொக்கமாகவும், ரூ.5000 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிபந்தனை விதித்திருந்தது. இதனால் சுப்ரதா ராய் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜாமீன் தொகையை திரட்டுவதற்காக வெளிநாடுகளில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் மற்றும் சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது. இந்த விற்பனையை மேற்கொள்வதற்கு ஏதுவாக திகார் சிறையில் இருந்த சுப்ரதா ராய்க்கு ஒரு சிறப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டது. குளிசாதன வசதிக்கொண்ட அந்த அறையில் வை-பை வசதியுடன் 2 லேப்டாப், 2 சாதாரண கம்யூட்டர் உட்பட பல்வேறு வசதிகள் இருந்துள்ளது. இந்த அறையை சுமார் ஒரு ஆண்டு பயன்படுத்தியதற்காக திகார் சிறை நிர்வாகத்திற்கு சுப்ரதா ராய் ரூ.1.23 கோடி செலுத்தியுள்ளார்.
நீதிமன்றம் கேட்ட ஜாமின் தொகையை கட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்காததால் தற்போது சுப்ரதா ராய் திகார் சிறையின் சாதாரண பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.